மருந்துப் பொருட்கள் மோசடி கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கு விளக்கமறியல்!

தரமற்ற மருந்துப் பொருட்கள் இறக்குமதி மோசடிக் குற்றச்சாட்டில் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவை விளக்கமறியலில் வைக்குமாறு மாளிகாகந்தை நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் நேற்றைய தினம் கைது செய்யப்பட்ட அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, இன்றைய தினம் காலையில் மாளிகாகந்தை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

இந்திய கடனுதவித் திட்டத்தின் கீழ் தரமற்ற மருந்துப் பொருட்கள் இறக்குமதி மூலம் அரசாங்க நிதி பாரியளவில் மோசடி செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் நீண்ட நாட்களாக மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் பிரகாரம் அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.

விளக்கமறியல் உத்தரவு
கெஹெலிய ரம்புக்வெல்ல சுகாதார அமைச்சராக செயற்பட்ட காலத்தில் இந்த மோசடி நடைபெற்றிருந்தது.

இந்நிலையில் அவரை எதிர்வரும் 15ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மாஜிஸ்திரேட் லோசனா அபேவிக்கிரம உத்தரவிட்டுள்ளார்.

இந்த வழக்கில் சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் ஜானக சந்திரகுப்த உள்ளிட்ட ஆறுபேர் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

முதலாம் இணைப்பு

அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படுவதற்காக மாளிகாகந்தை நீதவான் நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

தரமற்ற மருந்துப் பொருள் இறக்குமதி மோசடி தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் நேற்றைய தினம் (2.2.2024) கைது செய்யப்பட்டிருந்த கெஹெலிய ரம்புக்வெல்லவை நேற்று மாலையே நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது.

எனினும் நீதிமன்ற அறிவுறுத்தலுக்கு அமைய இன்றைய தினமே அவர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படுகின்றார்.

தரமற்ற மருந்து மோசடி
அதற்கேற்ப தற்போதைக்கு மாளிகாகந்தை நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். தரமற்ற மருந்துப் பொருள் மோசடி தொடர்பான வழக்கில் சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் உள்ளிட்ட ஆறுபேர் தற்போதைக்கு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சுகாதார அமைச்சின் முன்னாள் களஞ்சியப் பொறுப்பாளர் மாத்திரம் நேற்று முன்தினம் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மிக உயர் அதிகார மட்டத்தில் இருப்பவராக ஊடகங்களால் அடையாளப்படுத்தப்பட்டுள்ளார்.

இந்நிலையில் இன்னும் சற்று நேரத்தில் கெஹெலிய , நீதிபதி முன்பாக முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.