மின் கட்டணம் குறைக்கப்படும் வாய்ப்பு!

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் பரிந்துரைகள் கிடைக்கப்பெற்றதன் பின்னர் இம்மாத இறுதிக்குள் மின் கட்டணத்தை குறைக்க முடியும் என அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர் சந்திப்பில் நேற்று (10.2.2024) கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

மேலும், மின்சாரக் கட்டணத் திருத்தத்திற்குத் தேவையான பரிந்துரைகள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் மீண்டும் முன்வைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அதிக மின்சார கட்டணம் 

தெற்காசியாவில் அதிக மின்சார கட்டணம் அறவிடும் நாடாக இலங்கை உள்ளதாக புதிய புள்ளிவிபரங்கள் தெரிவித்துள்ளன.

இலங்கையின் முதல் தர பொருளியல் நுண்ணறிவு தளமாகிய வெரிட்டே நிறுவனத்தின் இணையத்தளம் வெளியிட்ட புள்ளிவிபரங்களுக்கு அமைய இந்த தகவல் வெளியாகி உள்ளது.

தெற்காசிய பிராந்திய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கை மக்கள் சராசரியாக 2.5 இருந்து 3 மடங்கு அதிகமாக மின்சார கட்டணத்தை செலுத்துவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இவ்வாறான ஒரு நிலையிலேயே, இம்மாத இறுதிக்குள் மின் கட்டணத்தை குறைக்க முடியும் என அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.