சிவஞானம் ஸ்ரீதரனுக்கு அறிவுரை கூறிய சம்பந்தன்

உட்கட்சி சூழ்ச்சிகளை முறியடித்து, உடனடியாக மாநாட்டை நடாத்துமாறு, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முன்னாள் தலைவரும் , நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன், கட்சியின் புதிய தலைவராகத் தெரிவுசெய்யப்பட்டுள்ள சிவஞானம் ஸ்ரீதரனுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் ஸ்ரீதரன், சார்ள்ஸ் நிர்மலநாதன் ஆகிய இருவரும் இணைந்து, கொழும்பிலுள்ள இல்லத்தில் இரா.சம்பந்தனை, செவ்வாய்க்கிழமை (13) சந்தித்துக் கலந்துரையாடியபோதே, அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது கட்சியின் தலைமைப் பொறுப்பை உத்தியோகபூர்வமாக ஏற்றுக்கொள்வதற்கு உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் சம்பந்தர் வலியுறுத்தியதாக கூறப்படுகின்றது.

அதோடு , நிருவாகிகள் தெரிவு தொடர்பில் இணக்க அடிப்படையில் எட்டப்பட்ட முடிவுகளை பொதுச்சபை அங்கீகரிக்காதவிடத்து, அல்லது அத்தெரிவுகளில் குழப்பங்கள் நிலவுமிடத்து,தேர்தல் முறைமை மூலம் தெரிவுகளை நடாத்தி, அன்றையதினமே மாநாட்டையும் நடாத்துமாறு சம்பந்தர் ஸ்ரீதரனுக்கு அறிவுறுத்தியதாகவும் கூறப்படுகின்றது.