கிளிநொச்சியில் களவாடப்படும் நெல் கண்டு கொள்ளாத பொலிசார்!

  கிளிநொச்சி பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வயல் அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில், காணி உரிமையாளர் அறியாதபடி, இரவோடு இரவாக அறுவடை செய்தமை தொடர்பில் பொலிஸர் கண்டுகொள்ளாமல் உள்ளதாக பாதிக்கப்படா தரப்பினர் விசனம் வெளியிட்டுள்ளனர்.

நெல் களவாடப்படுவது தொடர்பில் பளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டு, இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என பாதிக்கப்பட்ட தரப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

கண்டுகொள்ளாத பொலிஸார் 

கிளிநொச்சி பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இயக்கச்சி சங்கத்தார் வயல் பகுதியில் உள்ள மூன்று ஏக்கர் வயல் காணியில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்களே இவ்வாறு இரவிரவாக உரிமையாளருக்கே தெரியாமல் அறுவடை செய்யப்பட்டு, எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பாதிக்கப்பட்டவரால் கடந்த 1ஆம் திகதி பளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்தும், இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என பாதிக்கப்பட்டவளர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் உடனடி விசாரணை செய்து நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட அரச அதிபர் மற்றும் கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் ஆகியோர் பொலிஸாருக்கு கடிதங்களை வழங்கியபோதும், பொலிஸார் குறித்த திருட்டை கண்டுகொள்ளாதிருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.