கடவுச்சீட்டு வரிசையை குறைக்க நடவடிக்கை!

இலத்திரனியல் கடவுச்சீட்டு சேவையை அறிமுகப்படுத்த தயாராகி வருவதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அலுவலகத்தில் தற்போதுள்ள வரிசைகளை குறைக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (21.02.2024) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

மீண்டும் வரிசைகள்

அவர் மேலும் கூறுகையில், கொரிய மொழி புலமை பரீட்சை காரணமாக குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்கள அலுவலகத்திற்கு முன்பாக மீண்டும் வரிசைகள் அதிகரித்துள்ளன.

அந்தப் பிரச்சினையைத் தீர்க்கும் வகையில் கொரிய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி தேர்வில் சித்தி பெறுபவர்களுக்கு மாத்திரம் கடவுச்சீட்டு வழங்க ஏற்பாடு செய்யப்படவுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

மேலும், புதிய அடையாள அட்டையை ஆட்கள் பதிவு திணைக்களத்தின் ஊடாக வழங்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ளதையும் கூறவேண்டும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.