அதிக வெப்பம் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

நாட்டில் நிலவும் அதிக வெப்பம் காரணமாக மனிதர்களின் நரம்பு மண்டல செயற்பாடு குறைவடைய (Heat Stroke) வாய்ப்புள்ளதாக சுகாதாரத் துறையினர் எச்சரித்துள்ளனர்.

நீண்டநேர உடல் உழைப்பு காரணமாக இந்த நிலை ஏற்படலாமென சுகாதார அமைச்சின் சுற்றுச்சூழல், தொழில்சார் சுகாதாரம் மற்றும் உணவு பாதுகாப்பு பிரிவின் பிரதி பணிப்பாளர் மருத்துவர் ஆனந்த ஜெயலால் தெரிவித்தார்.

அதிக வெப்பத்தால் உடலில் நீரிழப்பு ஏற்படாமல் இருப்பதை உறுதிப்படுத்துவதற்காக தொடர்ந்து தண்ணீர் அருந்துமாறு மக்களுக்கு அவர் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

மன்னாரில் அதிக வெப்பநிலை
இதேவேளை மேல், வடமேல், தென், சப்ரகமுவ மாகாணங்களில் இன்று (02)அதிகளவு வெப்பநிலை நிலவுமென வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மன்னார் மாவட்டத்தின் சில இடங்களில் இன்று (02) மனித உடலால் தாங்கக்கூடிய வெப்பத்தை விட அதிகளவு வெப்பம் நிலவுமெனவும் வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலையால் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் குறைவடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.