தென் இலங்கையில் பலவந்தமாக காரில் கடத்தி செல்லப்பட்ட பெண்: சந்தேகநபர்கள் இருவர் கைது

மாத்தறை – திக்வெல்ல பிரதேசத்தில் பெண்ணொருவரை கடத்திச் சென்ற இரண்டு சந்தேகநபர்கள் பத்தேகம நகரில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

இன்று காலை திக்வெல்ல பிரதேசத்தில் உள்ள ஆடைத் தொழிற்சாலைக்கு சென்ற பெண் இருவரால் காரில் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் பத்தேகம வெளியேறும் பகுதியில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர், பத்தேகமாவில் இருந்து வெளியேறும் காரின் பின் இருக்கையில் பெண் ஒருவர் வலுக்கட்டாயமாக கடத்தப்படுவதை அவதானித்தார்.

இதையடுத்து, அதிவேக நெடுஞ்சாலையில் இருந்த அதிகாரிகள் சம்பவம் குறித்து பத்தேகம போக்குவரத்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

இந்நிலையில், பத்தேகம நகருக்கு அருகில் பொலிஸார் காரை நிறுத்தி சோதனையிட்ட போது, ​​காரின் கதவுகள் பூட்டப்பட்டிருந்த நிலையில் பின் இருக்கையில் அமர்ந்திருந்த நபர் கூரிய ஆயுதத்தைக் காட்டி பெண்ணை வலுக்கட்டாயமாக மிரட்டியதை பொலிஸார் அவதானித்துள்ளனர்.

இதன் போது, ​​சந்தேக நபரையும் பெண்ணையும் வெளியே எடுப்பதற்காக, கதவுகளின் கண்ணாடியை உடைப்பதற்கு முன்னர், நிலைமையைக் கட்டுப்படுத்த பொலிஸ் உத்தியோகத்தர் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டார்.

இதன் பின்னர், வெட்டுக்காயங்களுக்கு உள்ளான பெண்ணும் சந்தேக நபரும் சிகிச்சைக்காக பத்தேகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், சம்பவத்துடன் தொடர்புடைய கார் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சாரதி வலஸ்முல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 23 வயதுடையவர் எனவும் மற்றைய சந்தேக நபர் வலஸ்முல்ல பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.