கொடுத்த கடனை கேட்ட மூதாட்டியை துண்டு துண்டாக வெட்டி கொடூரமாக கொலை செய்த கொடூரன்!

இந்தியாவில் டெல்லியில் கடன் கொடுத்த மூதாட்டி ஒருவரை துண்டு துண்டாக வெட்டி உடலை கழிவு நீர்செல்லும் பகுதியில் வீசிய சம்பவம் ஒன்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த கொடூர கொலை சம்பவம் தொடர்பாக அயல் வீட்டில் வசித்த கணவன் மற்றும் மனைவியை பொலிஸார் கைது செய்துள்ளனர். டெல்லியில் கவிதா என்ற 72 வயது மூதாட்டி, அயல் வீட்டில் வசித்த அனில் ஆர்யா – தன்னு ஆர்யா தம்பதியினருக்கு ஒன்றரை லட்சம் ரூபாவை கடனாகக் கொடுத்துள்ளார்.

இதனை திருப்பி கேட்டபோது ஏற்பட்ட தகராறில், கணவன்-மனைவி ஆகிய இருவரும் சேர்ந்து, மூதாட்டியை பலமாக தாக்கி கொலை செய்துள்ளனர். இதனையடுத்து உடலை மூன்று துண்டாக வெட்டி, அங்கிருந்த கழிவு நீர் கால்வாயில் போட்டுள்ளனர்.

இதேவேளை, மூதாட்டியின் சடலத்தில் இருந்து நகைகளை எடுத்த தம்பதி, அந்த நகையை நிதி நிறுவனத்தில் அடகு வைத்து பணம் பெற்றதாகவும் கூறப்படுகிறது. உடலை வெட்டி கழிவு நீர் கால்வாயில் போட்டுவிட்டதாகவும், இதற்காக இரவு முழுவதும் மூதாட்டியின் வீட்டிலேயே இருந்து ரத்தக்கறையை அழித்ததாகவும் பொலிஸில் அவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளார்கள்.

மேலும் அவர்கள் இருவரும் பிளாஸ்டிக் பைகளில் எதையோ எடுத்துச் செல்வது அங்கிருந்த சிசிரிவி கமராவில் பதிவாகி பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.