வவுனியாவில் எரித்து அழிக்கப்பட்ட 2000 கிலோ கோழி இறைச்சி

பாவனைக்குதவாத 2000 கிலோகிராம் கோழிஇறைச்சி எரித்தழிக்கப்பட்டதாக வவுனியா தெற்கு பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர்.

குளிர்பதன் வெப்பநிலை, போதுமானளவு இல்லாமல் கொண்டுசெல்லப்பட்ட கோழி இறைச்சியே இவ்வாறு நேற்றையதினம் அழிக்கப்பட்டுள்ளது.

வடபகுதியில் விற்பனைக்காக கொண்டுவரப்பட்ட குறித்த இறைச்சி ஏற்றிய வாகனத்தினை வவுனியா ஈரற்பெரியகுளம் பகுதியில் வவுனியா பொது சுகாதார பரிசோதகர்கள் நேற்று சோதனைக்குட்படுத்தினர்.

இதன்போது , குறித்த வாகனத்தில் போதியளவு குளிரூட்டி இன்மையால் இறைச்சி பழுதடைந்த நிலையில் காணப்பட்டதையடுத்து, அவற்றை கைப்பற்றி நீதிமன்றத்தில் குறித்த பொருட்களை ஒப்படைத்துள்ளனர்.

கைப்பற்றப்பட்ட சுமார் 2,000 கிலோகிராம் கோழி இறைச்சியை வவுனியா நீதவான் நீதிமன்றத்தில் சமர்ப்பித்த பின்னர், அந்த இறைச்சி பாவனைக்கு உதவாது என நீதிமன்றத்தினால் உறுதிபடுத்தப்பட்டது.

இதையடுத்து, சுகாதார பரிசோதகர்களால் நேற்றையதினம் மாலை வவுனியா பாவற்குளம் மக்கள் குடிமனைகள் இல்லாத பகுதியில் உள்ள பொது இடத்தில் கோழி இறைச்சி தீ வைத்து எரித்தழிக்கப்பட்டது.

மேலும் இந்த சம்பவம் தொடர்பில் வவுனியா தெற்கு பொது சுகாதார பரிசோதகர்கள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.