இந்தியாவிடமிருந்து மேலும் 1.5 பில்லியன் டொலர் கடன் பெறும் இலங்கை!

இந்தியாவிடமிருந்து மேலும் 1.5 பில்லியன் அமெரிக்க டொலரை பெற்றுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் அண்மையில் பெற்ற கடன்கள் மற்றும் சலுகைகளுக்கு மேலதிகமாக இந்த தொகை பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இன்று கண்டியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை கூறினார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ இந்திய வெளிவிவகார அமைச்சருடன் கலந்துரையாடியதன் பின்னர் இலங்கைக்கு பாரிய உதவித் தொகை கிடைத்துள்ளது. தேவையான உணவுப் பொருட்கள், மருந்துப் பொருட்கள் மற்றும் சீமெந்து ஆகியவற்றைக் கொள்வனவு செய்ய அரசாங்கம் 1 பில்லியன் அமெரிக்க டொலரையும் எரிபொருள் கொள்வனவு செய்ய 500 மில்லியன் அமெரிக்க டொலரையும் நாட்டின் வெளிநாட்டுக் கையிருப்பை அதிகரிக்க 400 மில்லியன் அமெரிக்க டொலரையும் பெற்றுள்ளது.

அதேவேளை சீனாவும் இலங்கைக்கு 1 மில்லியன் மெட்ரிக்தொன் அரிசியை வழங்க உறுதியளித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். இதேவேளை கண்டி, கெட்டம்பேயில் மேம்பாலம் அமைப்பதற்கு ஹங்கேரி அரசாங்கம் பணம் வழங்க ஒப்புக்கொண்டுள்ள நிலையில், அதற்கு மேலதிகமாக சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பையும் அரசாங்கம் பெற முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.

தேவைப்படும் நேரத்தில் நட்பு நாடுகள் இலங்கைக்கு உதவி வருகின்றன, எனவே நாடு தனிமைப்படுத்தப் படவில்லை அல்லது வங்குரோத்து விளிம்பில் இல்லை என்றும் அவர் கூறினார்.ஜனாதிபதியின் அல்லது நாடாளுமன்றத்தின் பதவிக் காலத்தை இரண்டு வருடங்களுக்கு நீடிப்பது தொடர்பில் எவ்வித கலந்துரையாடலும் இடம்பெறவில்லை என்றும், அரசாங்கம் பொது வாக்கெடுப்பு நடத்துவதில் கவனம் செலுத்தவில்லை மாறாக அடுத்த மூன்று வருடங்களில் தனது வேலைத்திட்டத்தை முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

2019 ஆம் ஆண்டு ஜனாதிபதிக்கு ஐந்தாண்டு கால அதிகாரம் கிடைத்துள்ளதாகவும், அந்தப் பதவிக் காலத்தை நிறைவேற்றுவதற்கு எந்த சட்டமும் திருத்தப்பட வேண்டிய அவசியமில்லை என்றும் , இவ்வாறான கூற்றுக்களால் திசை திருப்பப்படுவதற்குப் பதிலாக அடுத்த மூன்று வருடங்களில் மக்கள் மற்றும் நாட்டின் நல்வாழ்வை நோக்கி அரசாங்கம் செயற்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.