பிள்ளையின் பசியை போக்கிய தாய்மீது தாக்குதல்!

மரத்திலிருந்து ஈரப்பலாக்காயைப் பறித்து அதை விற்பனை செய்து பிள்ளையின் பசியை போக்க 500 கிராம் அரிசி வாங்கிய பெண்ணொருவர்மீது, மரத்துக்குச் சொந்தக்காரர் தாக்குதல் நடத்திய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

வெலிகேபொல, பிரதேசத்திலுள்ள கிராமமொன்றில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சில தினங்களுக்கு முன்னர் வெலககேபொல பொலிஸ் நிலையத்தில், தன்மீது தாக்குதல் நடத்தியதாக குறித்த பெண் முறைப்பாடு செய்துள்ளார்.

இதனையடுத்து பொலிஸார், இருதரப்பினரையும் வரவழைத்து பொலிஸார் விசாரணை நடத்தியதில், முறைப்பாட்டாளர் தன்னைத் தாக்கியது உறவினர் ஒருவர் என தெரிவித்துள்ளார்.

முறைப்பாட்டாளர் வறுமையில் வாடும் ஒரு பிள்ளையின் தாயார் எனவும், சுகயீனமுற்றுள்ள தமது பிள்ளைக்கு உணவுக்கு எதுவும் கொடுக்க இல்லாததால், அருகிலுள்ள உறவினருக்கு சொந்தமான ஈரப்பலா மரத்தில் காயொன்றைப் பறித்து 100 ரூபாவுக்கு விற்பனை செய்துள்ளார் .

அதன்பின்னர் அந்தப் பணத்தில் 500 கிராம் அரிசியை வாங்கியுள்ளார். இந்நிலையில் ஈரப்பலா பறிக்கப்பட்டுள்ளதை அறிந்துகொண்ட உறவினர், கோபமுற்று அவரை தாக்கியமை விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து இருதரப்பினரையும் பொலிஸார் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.