கிளிநொச்சி மகா வித்தியாலயத்தில் குளவி கொட்டுக்கு இலக்கான மாணவர்கள் : 11 பேர் அவசர சிகிச்சை பிரிவில்!

கிளிநொச்சி மகா வித்தியாலயத்தில் குளவி கூடு கலைந்தமையால் 25 மாணவர்கள் குளவி கொட்டுக்கு இலக்காகி கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அதில் 11 பேர் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இச்சம்பவமானது இன்று பாடசாலை நிறைவுபெறும் நேரத்தில் இடம்பெற்றுள்ளது.

குறித்த பாடசாலையில் பகல் 1.30 மணியளவில் குரங்குகளின் நடவடிக்கையால் குளவி கூடு கலைந்துள்ளது.

இதன் காரணமாக பாடசாலை விட்டு வெளியேறுகின்ற நேரத்தில் பல மாணவர்கள் குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.

இவர்கள் உடனடியாக சமுர்த்தி திணைக்களப் பணிப்பாளரின் வாகனத்தில் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்ட மாணவர்களில் 11 பேர் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஏனையவர்களை விடுதிகளுக்கு அனுப்பி சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

பாடசாலையில் குளவி கூடு கலைந்த போது பாடசாலையின் அபாய சமிஞ்சை ஒலி எழுப்பட்டுள்ளது. இதன் காரணமாக மாணவர்கள் பதற்றத்துக்கு உள்ளாகியுள்ளனர். ஆனாலும் பாடசாலையின் பிரதான வாயில் மட்டுமே திறந்துவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஏனைய இரண்டு வாயில்களும் பூட்டப்பட்டே காணப்பட்டதாகவும், ஆபத்துகளின் போது மாணவர்களை பாதுகாப்பாக வெளியேற்றும் எந்த பொறிமுறையும் இன்றி பாடசாலை காணப்பட்டதாகவும் சம்பவத்தை நேரில் பார்த்த பெற்றோர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.