வவுனியாவில் சற்றுமுன் இடம்பெற்ற விபத்தில் முதியவர் ஒருவர் பலி!

வவுனியாவில் அரச பேருந்து ஒன்று இருசக்கர வண்டியுடன் மோதியதில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவமானது இன்று 15 வவுனியா, வைத்தியசாலை சுற்றுவட்டத்தில் இடம்பெற்றுள்ளது.

அரச பேருந்து வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் இருந்து மாலை 5.30 மணியளவில் மன்னார் நோக்கி புறப்பட்ட பேருந்து, பயணிகளை ஏற்றிக்கொள்வதற்காக வவுனியா வைத்தியசாலை சுற்றுவட்ட வீதி ஊடாக குடியிருப்பு நோக்கி சென்று கொண்டிருந்த போது வைத்தியசாலை வீதியில் இருந்து குடியிருப்புக்கு திரும்பிக்கொண்டிருந்த இரு சக்கர வாகனம் மீது மோதியுள்ளது.

இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற முதியவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

உயிரிழந்தவர் வவுனியா, வெளிக்குளம் பகுதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான கந்தையா தவராசா (வயது 65) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

விபத்தின் பின்னர், இ.பே.சபை சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா போக்குவரத்து பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.