அரசிற்கு எதிராக திரும்பும் மின்சாரசபைஊழியர்கள்

இலங்கை மின்சார சபையை தனியார் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்பனை செய்யும் அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு எதிராக, நாடு முழுவதும் பாரிய தொழில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மின்சார ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ரஞ்சன் ஜயலால் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் நாடாளுமன்றத்தில் புதிய சட்டமூலங்களை கொண்டு வந்து மின்சார சபையை தனியார் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்பனை செய்வதற்கான அனைத்து திட்டங்களையும் அரசாங்கம் ஏற்கனவே தயார் செய்துள்ளதாக மின்சார ஊழியர் சங்க பொது செயலாளர் தெரிவித்துள்ளார்.

அனுராதபுரத்தில் நேற்று (14) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 1969 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க இலங்கை மின்சார சபைச் சட்டத்தை நீக்குவதற்கு அரசாங்கம் புதிய சட்டமொன்றை பாராளுமன்றத்தில் கொண்டு வருவதற்கு தயாராகியுள்ளதாகவும் புதிய சட்டத்தின் உள்ளடக்கம் குறித்து எழுத்துமூலமான அறிக்கையை வெளியிடவில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, 3,800க்கும் மேற்பட்ட பயிற்சி பெற்ற ஊழியர்களை பெரும் செலவில் பணிநீக்கம் செய்ய வேண்டியிருக்கும் என்றும், மின்சார வாரியத்தை வாங்கும் 15 நிறுவனங்களின் சுமை மின்சார நுகர்வோர் மீது சுமத்தப்படும் என்றும் ரஞ்சன் ஜெயலால் குறிப்பிட்டார்.

இதன்போது இலங்கை மின்சார ஊழியர் சங்கத்தினால் நாடு முழுவதும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருவதாகவும், விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒன்று அனுராதபுரம் நகரிலுள்ள வடமத்திய மாகாண பிரதிப் பொது முகாமையாளர் அலுவலகத்திற்கு முன்பாக நேற்று இடம்பெற்றதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இலங்கை மின்சார சபை தொடர்பில் அரசாங்கம் கொண்டு வந்துள்ள அழிவுச் சட்டமூலத்திற்கு எதிராக மேற்கொள்ளப்பட வேண்டிய தொழில்சார் நடவடிக்கைகள் இம்மாதம் 21ஆம் திகதி விகாரமஹாதேவி திறந்தவெளி அரங்கில் நடைபெறவுள்ள மாபெரும் மாநாட்டில் நடைபெறவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.