தேசிய கீதத்தை தவறாகபாடியதற்காக மன்னிப்பு கோரிய பாடகி உமாரா சிங்கவன்ச

எல்.பி.எல். 2023 இன் ஆரம்ப நிகழ்வில் தேசிய கீதத்தை தவறாக பாடினார் என்ற குற்றச்சாட்டிற்குள்ளான பாடகி உமாரா சிங்கவன்ச அதற்காக மன்னிப்புக் கோரியுள்ளார்.

எல்.பி.எல். போட்டியின் ஆரம்ப நிகழ்வில் தான் தேசிய கீதத்தை பாடியவிதம் எவரையாவது புண்படுத்தியிருந்தால் அதற்காக மன்னிப்புக் கோருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

தனது முகநூலில் இதனை பதிவு செய்துள்ள அவர் தேசிய கீதத்தை இசைத்தவேளை வார்த்தை பிரயோகங்களில் தவறுகள் காணப்பட்டதை தானும் உணர்ந்ததாக தெரிவித்துள்ளார்.

நான் வார்த்தைகளை மாற்ற முயலவில்லை தேசிய கீதத்தை திரிபுபடுத்தவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை பிரஜை என்ற வகையில் நான் எப்போதும் தேசியக்கொடியை பெருமையுடன் கொண்டுசென்றுள்ளேன். நாட்டின் பெருமையை உயர்த்த முயன்றுள்ளேன். பாடல்கள் மூலம் என்னால் முடிந்தவரை நாட்டிற்கு பங்களிப்பு செய்துள்ளேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.