நுவரெலியா பிரதான வீதியில் கோர விபத்து!

எரிபொருளை ஏற்றிச் சென்ற பௌசரும் மோட்டார் வாகனம் ஒன்றும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் மோட்டார் வாகனத்தில் பயணித்த ஐவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று (12) இரவு 10 மணியளவில் ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் திம்புலபதான சந்தியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

வெலிமடையிலிருந்து கொட்டகலை திசை நோக்கிச் சென்ற பௌசரும் நோர்வூட்டில் இருந்து தலவாக்கலை திசை நோக்கிச் சென்ற மோட்டார் வாகனமும் நேருக்கு நேர் மோதியுள்ளது.

மோட்டார் வாகனத்தை ஓட்டிச் சென்ற சாரதி அளவுக்கு அதிகமாக மதுபானம் அருந்தி இருந்ததாக கூறப்படுகிறது.

விபத்தில் காயமடைந்த ஐந்து பேரும் நோர்வூட் பிரதேசத்தில் வசிக்கும் 20-30 வயதுக்குட்பட்டவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்தவர்கள் திம்புல பத்தனை பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் பிரதேசவாசிகளால் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

விபத்தில் மோட்டார் வாகனமும் எரிபொருள் பௌசரும் பலத்த சேதமடைந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.