வாகன மோசடியில் ஈடுபட்ட மூவர் கைது!

வாடகை அடிப்படையில் பெறப்பட்ட வாகனங்ளை வைத்து போலி ஆவணங்களை தயாரித்து விற்பனை செய்யும் மோசடியில் ஈடுபட்ட பெண் உட்பட மூவரை பாணந்துறை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.

பாணந்துறை பிரதேசத்தில் நபர் ஒருவரிடமிருந்து வாகனம் ஒன்றை பெற்று போலி ஆவணங்களை தயாரித்து விற்பனை செய்ததாக கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் 02 கார்களுடன் இவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விசாரணைகளின் போது, ​​விற்பனை மற்றும் அடமானம் வைக்கப்பட்ட மேலும் 02 கார்கள், போலியான சாரதி அனுமதிப்பத்திரங்கள் உள்ளிட்ட பல ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

சந்தேகநபர்கள் இருவரும் தம்புள்ளை மற்றும் கலேலியா பிரதேசங்களை சேர்ந்தவர்கள் எனவும், சந்தேக நபரான பெண் பொலன்னறுவை பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர்கள் பாணந்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்