கொடுத்த கடனை கேட்க சென்றவர் மீது கொடூர தாக்குதல்!

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கடனை மீள பெற வந்த இருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு, ஹோமாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மஹரகம, நாவின்ன பிரதேசத்தில் நேற்று (19) காலை இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் தலகல, கிரிவந்துடுவ பகுதியைச் சேர்ந்த 58 வயதுடையவர் எனவும், உயிரிழந்தவர் நாவின்ன பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவருக்கு கடன் வழங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இறந்தவர் கடன் தொகையை வசூலிப்பதற்காக மற்றொரு நபருடன் முச்சக்கர வண்டியில் கடனாளியின் வீட்டிற்கு சென்றுள்ளார்.

இருவரும் வந்து கடனாளியின் வீட்டின் மூடியிருந்த கேட்டை திறக்க முற்பட்டதுடன், அப்போது கடன் வாங்கிய வீட்டின் உரிமையாளர் கூரிய ஆயுதம் ஒன்றை கொண்டு வந்து இருவரையும் தாக்கி காயப்படுத்தியுள்ளார்.

பின்னர் காயமடைந்த இருவரும் தாங்கள் வந்த அதே முச்சக்கரவண்டியில் ஹோமாகம வைத்தியசாலைக்கு சென்றுள்ளனர்.

சந்தேகநபருக்கு வழங்கப்பட்ட கடன் தொகையை பெற்றுக் கொள்ள உயிரிழந்தவர் வந்த போதே இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

கொலையை செய்த 60 வயதுடைய சந்தேக நபர் ஹோகந்தர பிரதேசத்தில் இருந்து தப்பிச் சென்ற வேளையில் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மஹரகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.