போதைக்கு அடிமையான கான்ஸ்டபிள் பணி இடைநீக்கம்

போதைப்பொருள் பாவனைக்கு அடிமையான குற்றச்சாட்டின் பேரில் கொழும்பு போக்குவரத்து பிரிவில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஆரம்பகட்ட விசாரணையின் பின்னர் கொழும்பு போக்குவரத்து பிரிவின் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரியினால் இந்த கான்ஸ்டபிள் பணி இடைநிறுத்தப்பட்டுள்ளார்.

கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் பொலிஸ் குழுவொன்று சேதாவத்தை பிரதேசத்தில் போதைப்பொருள் விற்பனை செய்யும் இடத்தை சுற்றிவளைத்த போது, அங்கு தங்கியிருந்தபோதே இந்தப் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரான பொலிஸ் கான்ஸ்டபிள் கொழும்பு சட்ட வைத்தியரிடம் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து, ஆபத்தான போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர் என மருத்துவ அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.