நீச்சல் தடாகத்தில் மூழ்கி பல்கலை மாணவர் பலி

ரஜரட்ட பல்கலைக்கழக நீச்சல் தடாகத்தில் அத்துமீறி நுழைந்த 6 மாணவர்களில் ஒரு மாணவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

முகாமைத்துவ விஞ்ஞான பீடத்தின் முதலாம் வருட மாணவர்கள் குழுவொன்றே நீச்சல் தடாகத்திற்குள் பிரவேசித்துள்ளனர்.

அறிவுறுத்தல்களை பின்பற்றாமல் மாணவர்கள் பாதுகாப்பற்ற முறையில் நடந்து கொண்டதன் காரணமாகவே இந்த விபத்து ஏற்பட்டதாக ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சஞ்சீவனி கினிகத்தர தெரிவித்தார்.

மட்டக்களப்பு கொக்குவில் பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய முருகதாஸ் திலக்சன் என்பவரே நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

நீரில் மூழ்கி ஆபத்தான நிலையில் இருந்த மாணவர் மிகக் குறுகிய காலத்திற்குள் மிஹிந்தலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் அவர் ஏற்கனவே உயிரிழந்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

சடலம் பிரேத பரிசோதனைக்காக அனுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன், மிஹிந்தலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.