நேருக்கு நேர் மோதிய இரண்டு பேருந்துகள்

கொழும்பு – கண்டி வீதியின் கஜுகம பகுதியில் கொழும்பில் இருந்து தங்கொவிட்ட நோக்கி  ஊழியர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துடன் நேருக்கு நேர் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்து நேற்று (29) இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காத்தான்குடியில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தே தனியார் பேருந்தினால் விபத்திற்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தனியார் பேருந்து அதே திசையில் சென்ற மற்றுமொரு வாகனத்தை முந்திச் சென்ற போதே விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தில் தனியார் பேருந்தின் சாரதி உயிரிழந்துள்ளதுடன், இரண்டு பேருந்துகளிலும் பயணித்த 4 பெண்களும் 5 ஆண்களும் காயமடைந்து வத்துப்பிட்டிவல மற்றும் வரக்காபொல வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கம்புரதெனிய, பதங்கோவிட்ட பகுதியைச் சேர்ந்த 44 வயதுடைய நபரே விபத்தில் உயிரிழந்துள்ளார்.

சடலம் வத்துப்பிட்டிவல வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், விபத்து தொடர்பில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

விபத்து தொடர்பில் நிட்டம்புவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.