காலநிலை தொடர்பான அறிவிப்பு!

சப்ரகமுவ, மேல்,தென் மற்றும்  வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி  மற்றும் நுவரேலியா  மாவட்டங்களிலும் அடிக்கடி வமழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என சிரேஸ்ட  வானிலை அதிகாரி மொஹமட் சாலிஹீன் வீரகேசரி இணையத்திற்கு தெரிவித்தார்.

வானிலை குறித்து அவர் மேலும் கூறுகையில்,

அம்பாந்தோட்டை மாவட்டத்தின் சில இடங்களில் 100 மில்லிமீற்றரிலும் கூடிய பலத்த மழைபெய்யக்கூடும். 

சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் காலி, மாத்தறை மற்றும் புத்தளம் மாவட்டங்களின் சில இடங்களிலும் 50 மில்லிமீற்றரிலும் கூடிய ஓரளவு பலத்த மழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

ஏனைய பிரதேசங்களின்  பல இடங்களில் குறிப்பாக கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களின் பல இடங்களில்  மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்புக் காணப்படுகின்றது. 

பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்பாடு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.    

புத்தளம் தொடக்கம் கொழும்பு,காலி, மாத்தறை  ஊடாக  அம்பாந்தோட்டை  வரையான  கடல் பிராந்தியங்களில்  அடிக்கடி  மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 30 – 40 கிலோமீற்றர் வேகத்தில் தென் மேற்குத் திசையில் இருந்து காற்று வீசும். 

புத்தளம் தொடக்கம்  மன்னார், காங்கேசன்துறை  ஊடாக திருகோணமலை வரையான அத்துடன் அம்பாந்தோட்டை தொடக்கம் பொத்துவில் வரையான கடல்  பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு  50 ‐ 60 கிலோமீற்றரிலும் கூடிய வேகத்தில் அடிக்கடி காற்று அதிகரித்து வீசக்கூடும்.  இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள்  கொந்தளிப்பாகக் காணப்படும்.

ஆனால் இடியுடன் கூடிய மழை பெய்கின்ற சந்தர்ப்பங்களில் பலத்த காற்று வீசுவதுடன் அவ்வேளைகளில் கடல் பிராந்தியங்கள் தற்காலிகமாக மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படும் என தெரிவித்தார்.