உயிரிழந்த இளைஞன் தொடர்பாக மேலதிக விசாரணைகள்

வட்டுக்கோட்டை பொலிஸாரால் சித்திரவதைக்குள்ளான நிலையில் இளைஞன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக நீதிமன்ற உத்தரவுப்படி யாழ்ப்பாண பிராந்திய குற்றத்தடுப்பு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

சித்திரவதைக்குள்ளான மற்றைய இளைஞனை சட்டத்தரணிகளின் துணையுடன் கூட்டிச் சென்று உயிரிழந்த  இளைஞனை பொலிஸார் சித்திரவதைக்குள்ளாக்கிய இடங்களில் விஞ்ஞான ரீதியான தடயவியல் சோதனைகளை மேற்கொள்ள யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதன்படி வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் யாழ்ப்பாண பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி தெ.மேனன் தலைமையிலான குழுவினர் நேற்று (28) சோதனைகளை மேற்கொண்டனர்.

இதன்போது உயிரிழந்த இளைஞனுடன் உடனிருந்த மூன்றாவது சாட்சியான மற்றைய இளைஞன், சித்திரவதைக்கு உட்படுத்திய பொலிஸ் நிலையத்திற்குள் உள்ள இடங்களை காண்பித்தார்.

இவற்றினை பார்வையிட்டு  பிராந்திய குற்றத்தடுப்பு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர்.

வட்டுக்கோட்டை பொலிஸாரினால் சித்தங்கேணி பகுதியை சேர்ந்த நாகராசா அலெக்ஸ் எனும் இளைஞன் கைது செய்யப்பட்டு சித்திரவதைக்கு உள்ளான நிலையில் கடந்த 19 ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.