உயிரிழந்த நிலையில் சிறுத்தைப்புலி மீட்பு


மஸ்கெலியா – பிரவுன்ஸ்வீக் தோட்டத்தில் இன்று (29) காலை உயிரிழந்த நிலையில் சிறுத்தைப்புலி ஒன்று மீட்கப்பட்டுள்ளது என்று வனஜீவராசி திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.

பொதுமக்கள் வழங்கிய தகவலையடுத்தே குறித்த சிறுத்தை புலி சடலம் மீட்கப்பட்டுள்ளதாகவும், வேட்டைப் பொறியில் சிக்கியிருந்த நிலையில் மீட்கப்பட்ட குறித்த சிறுத்தைப் புலி உயிரிழந்த நிலையிலேயே காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

6 அடி நீளமான இளம் வயதுடைய ஆண் சிறுத்தைப் புலியே, இவ்வாறு பொறியில் சிக்கி பலியாகியுள்ளது. வனவிலங்குகளை வேட்டையாடுவதற்காக வைக்கப்பட்டிருந்த பொறியிலேயே இது சிக்கியுள்ளது.

குறித்த சிறுத்தையின் சடலத்தை நல்லதண்ணி வனஜீவராசிகள் எடுத்து சென்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இத்தோட்டத்தில் சில மாதங்களுக்கு மேலாக சிறுத்தைகள் நடமாட்டம் அதிகமாக காணப்படுவதுடன் லயன் குடியிருப்பு பகுதிகளுக்கும் இவைகள் வந்து சென்றுள்ளதாகவும், காவலுக்காக வளர்க்கப்படுகின்ற நாய்களையும் இச் சிறுத்தைகள் வேட்டையாடி உண்ணுவதாக பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.