மரக்கறி விலைகள் அதிகரிப்பு!

  நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலையினை அடுத்து கடந்த சில வாரங்களாக மரக்கறிகளின் விலைகளும் அதிகரித்து காணப்படுவதாக மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக கனமழை காரணமாக விவசாய நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளமையும் இதற்கு காரணம் என கூறப்படுகின்றது.

குறிப்பாக தக்காளி பச்சைமிளகாய் கத்தரிக்காய் கரட் லீட்ஸ் பெரிய வெங்காயம் என்பவற்றின் விலை இருமடங்காக அதிகரித்துள்ளதுடன் ஒரு கிலோகிராம் தக்காளி 500 ரூபாவாகவும் ஒரு கிலோகிராம் பச்சை மிளகாய் ஆயிரம் ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுவதாக மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

பண்டிகைக்கால வியாபாரங்கள்

அதேவேளை எதிர்வரும் பண்டிகைக்கால வியாபாரங்கள் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ள நிலையில் முட்டையின் விலையும் தற்போது அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

அந்தவகையில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் 45-55 ரூபா வரை விற்பனையான முட்டை தற்போது 60 ரூபாவை தாண்டி விற்பனை செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.