நாடு முழுவதும் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள்!

நாடு முழுவதும் உள்ள 2,300க்கும் மேற்பட்ட தேவாலயங்களில் கிறிஸ்மஸ் தினத்தை முன்னிட்டு 7,500க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

கிறிஸ்மஸ் மற்றும் பண்டிகை காலத்தை முன்னிட்டு நாடு முழுவதும் விரிவான பாதுகாப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டு, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக காவல்துறை மற்றும் சிறப்பு அதிரடிப்படையினர் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு ஏற்பாடுகளை செயல்படுத்துவது குறித்து, மூத்த அதிகாரிகளுக்கு சுற்றறிக்கைகள் அனுப்பப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் ஒவ்வொரு தேவாலயத்திலும் ஒரு பொதுமக்கள்குழு நிறுவப்பட்டுள்ளது.

அந்தந்த காவல்துறை பகுதிகளில் உள்ள மூத்த காவல்துறை அதிகாரிகள், இந்த குழுக்களுடன் பாதுகாப்பை ஒருங்கிணைக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக காவல்துறை விசேட அதிரடிப்படையினரைப் பயன்படுத்துமாறு பணிப்பாளர் பணிப்புரை விடுத்துள்ளதாகவும், தேவைப்பட்டால் இராணுவம் அல்லது ஏனைய பாதுகாப்புப் படையினரின் உதவியை நாடுமாறும் காவல்துறைக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.