மட்டக்களப்பில் பாரிய போராட்டம் முன்னெடுப்பு!

புதிய இணைப்பு
மட்டக்களப்பு காந்தி பூங்காவில் அனுமதி பெற்று அமைக்கப்பட்டிருந்த உண்ணாவிரத போராட்ட கூடாரங்களை அகற்றுமாறும் இவ்விடத்தில் போராட்டம் செய்ய வேண்டாம் எனவும் பொலிஸார் அச்சுறுத்தல் விடுத்துள்ளனர்.

முன்னதாக இதற்கான அனுமதிகள் பொலிஸ் மற்றும் மாநகர சபையில் பெறப்பட்டிருந்த நிலையில் கொழும்பிலிருந்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்கமைய இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முதலாம் இணைப்பு
இலங்கை அரசாங்கத்தினால் கொண்டுவரப்படும் பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் மற்றும் நிகழ்நிலை காப்புச்சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து மட்டக்களப்பில் பாரிய போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த போராட்டம் இன்று (22.01.2024) மட்டக்களப்பு கல்லடி பாலத்தின் அருகிலிருந்து காந்தி பூங்கா வரையில் நடைபெற்றுள்ளது.

கிழக்கு மாகாண ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் கொண்டுவரப்படும் இவ்வாறான சட்டங்கள் சிறுபாண்மையினத்தை ஒடுக்கும் வகையில் காணப்படுவதால் இந்த சட்டத்தை மீளப்பெற வலியுறுத்தியும் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த போராட்டத்தில் சிவில் சமுக அமைப்பு மற்றும் மகளிர் அணி பிரதிநிதிகள் உட்பட பல பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டுள்ளனர்.