பாணின் நிறை தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி!

பாணொன்றின் நிறை 450 கிராமாக இருக்க வேண்டும் என கடந்த வாரம் அரசாங்கம் வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தல் காரணமாக குறித்த நிறையுள்ள பாணின் விலை 170 ரூபா வரை உயரும் சாத்தியம் உள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் எம்.கே.ஜெயவர்தன கூறியுள்ளார்.

பாண் உற்பத்தி

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டில் பாண் உற்பத்தி செய்யும் 3 தரப்பினர் உள்ளனர்.

அதில் முதல் தரப்பு சிறிய அளவிலான பாணை தாங்களாகவே தயாரித்து விற்பனை செய்யும் நிலையில் தற்போதைய நிலையில் அவர்களுக்கு 140 ரூபாவிற்கு குறைவாக 450 கிராம் நிறையுடைய பாணை விற்க முடியும்.

மற்றைய பகுதியினர் நடுத்தர அளவில் பாணை உற்பத்தி செய்து வியாபாரிகள் மூலம் கமிஷனுக்கு விற்பவர்கள். அத்துடன், பெரிய தொழிலதிபர்கள் பெரிய அளவில் தயாரித்து விற்பவர்கள். இவர்கள் இருவருமே பாணொன்றுக்கு சுமார் 30 ரூபா கமிஷன் கொடுக்க வேண்டும்.

விலை உயரும் சாத்தியம்

பாண் உற்பத்திக்கு தேவையான பொருட்களின் விலைகளும் அதிகரித்துள்ளன. இதன் காரணமாக இவ்விரு வகையினரும் 450 கிராம் எடையுள்ள பாணை 160 – 170 ரூபா வரையில் விற்பனை செய்ய வேண்டிய நிலை உள்ளது.

இதன் காரணமாகவே சிறிய அளவிலான பாணை விற்பனை செய்வது தவிர்க்க முடியாததாக உள்ளது. இதேவேளை தற்போது சரியான நிறையுடைய பாணை தயாரிக்குமாறு எமது உறுப்பினர்களுக்கு அறிவுறுத்த முடியும், ஆனால் அதிகபட்ச விலையை நிர்ணயிக்க முடியாது என குறிப்பிட்டுள்ளார்.