சாந்தன் விவகாரத்தில் இந்தியா மீது குற்றம் சுமத்தும் இலங்கை!

“சாந்தனின் மரணம் இயற்கையானது, அவரை குடும்பத்துடன் ஒன்று சேர்ப்பதற்கு மனிதாபிமான அடிப்படையில் நடவடிக்கைகளை முன்னெடுத்தோம் எனினும் இந்தியா அனுமதி வழங்கவில்லை எனவே பொய்யான குற்றச்சாட்டுக்களை முன்வைக்க வேண்டாம்.” என வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் நேற்றையதினம்(6) இடம்பெற்ற அமர்வில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் சாந்தனின் மரணம் தொடர்பாக பேசிய போது அவருக்கு பதிலளிக்கும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், “சாந்தன் இந்தியாவின் முன்னாள் பிரதமரின் கொலையுடன் தொடர்புடைய குற்றவாளியாவார். இந்தியாவிலேயே அவர் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.

சாந்தனின் மரணம்

அவரை இலங்கைக்கு அழைத்து வருவது தொடர்பில் டக்ளஸ் தேவானந்தா உள்ளிட்ட வடக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கைகளை முன்வைத்திருந்தனர். இந்நிலையில் மனிதாபிமான அடிப்படையில் சாந்தனை இலங்கைக்கு அழைத்துவந்து அவரின் உறவினர்களுடன் இணைக்க அரசாங்கம் முயற்சித்தது.

ஆனால் இந்திய அரசிடம் இருந்து சாதகமான பதில்கள் உடனடியாக கிடைக்கவில்லை. இந்நிலையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த சாந்தன் உயிரிழந்துவிட்டார். இது இயற்கை மரணமே.

இதனால் இந்த விடயத்தை அரசியலுக்கு பயன்படுத்த வேண்டாம். அனைத்துக்கும் எதிர்ப்பு தெரிவிக்கும் நிலையில் இருந்து விடுபடுங்கள். சாந்தன் இயற்கை காரணிகளால் உயிரிழந்தார்.ஆகவே இவ்விடயத்தை அரசியலுக்கு பயன்படுத்த வேண்டாம்.அனைத்துக்கும் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டாம்.

சாந்தனை நாட்டுக்கு அழைக்கும் செயற்பாடுகளை மனிதாபிமான அடிப்படையில் முன்னெடுத்தோம் என்பதை மீண்டும் குறிப்பிட்டுக் கொள்கிறேன்” என குறிப்பிட்டார்.