பாடசாலை மாணவியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய அதிபருக்கு 30 வருட கடூழிய சிறைத்தண்டனை

  16 வயதுக்குட்பட்ட பாடசாலை மாணவியை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் அம்பலாங்கொட கொடஹேன கல்லூரியின் முன்னாள் அதிபருக்கு நீதிமன்றம் 30 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்துள்ளது.

அதோடு துஷ்பிரயோகத்திற்கு உள்ளான மாணவிக்கு ஒரு இலட்சம் ரூபா நட்டஈடு வழங்குமாறும் பலப்பிட்டிய மேல் நீதிமன்ற நீதிபதி ரங்க திஸாநாயக்க, நேற்று (30) உத்தரவிட்டுள்ளார்.

அதிபரின் குற்றம் நிரூபணம்

குற்றத்திற்காக விதிக்கப்பட்ட சிறைத்தண்டனைக்கு மேலதிகமாக ரூபா 15000/- அபராதம் விதித்த நீதிபதி, 30 வருட சிறைத்தண்டனையை 10 வருட காலப்பகுதியில் அனுபவிக்குமாறும் உத்தரவிட்டார்.

அம்பலாங்கொட கொடஹேன கல்லூரியின் அதிபராக இருந்த ஆர்.எம்.மேர்வின் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதன் காரணமாக அவருக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2004 ஆம் ஆண்டு ஜனவரி முதல் ஒக்டோபர் மாத பகுதிவரை, பாடசாலையில் கல்வி கற்று வந்த 16 வயதுக்குட்பட்ட மாணவி ஒருவரை துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பில் பிரதிவாதிக்கு எதிராக சட்டமா அதிபர் 03 குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்குத் தாக்கல் செய்திருந்தார்.

நீண்ட விசாரணை

இது தொடர்பான நீண்ட விசாரணையின் முடிவில், குற்றம் சாட்டப்பட்டவர் மீதான குற்றச்சாட்டுகளை சந்தேகத்திற்கு இடமின்றி அரசுத் தரப்பு நிரூபித்துள்ளதாக முடிவு செய்யப்பட்டது.

இதனையடுத்து ஒவ்வொரு குற்றச்சாட்டிற்கும் தலா 10 வருடங்கள் வீதம் 30 வருடங்கள் தண்டனை விதித்த நீதிபதி, தண்டனையை 10 வருட காலத்திற்குள் அனுபவிக்க உத்தரவிட்டார்.

மேலும் ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் ரூ.5000/- வீதம், 03 குற்றச்சாட்டுகளுக்கும் ரூ.15000/- அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.