காணாமல்போன இளைஞர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு

மட்டக்களப்பு – வெல்லாவெளி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட திக்கோடை பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞரொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த இளைஞர் நேற்று முன்தினம் இரவு தனது மாடுகளை பார்த்துவிட்டு வருவதாக தாயிடம் கூறி விட்டு சென்றுள்ள போதும் பல மணி நேரங்களுக்கு பின்னரும் அவர் வீடு திரும்பாத நிலையில் உறவினர்கள் அவரை தேடியுள்ளனர்.

இவ்வாறான சந்தர்ப்பத்தில் காணாமல் போன இளைஞர் நேற்று அதிகாலை 5 மணியளவில் திக்கோடை பொது மயானத்தில் மரம் ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இதனை அடுத்து களுவாஞ்சிக்குடி சுற்றுலா நீதிமன்ற நீதவானின் உத்தரவுக்கு அமைய வெல்லாவெளி பிரதேச பிரிவிற்கு உட்பட்ட பதில் மரண விசாரணை அதிகாரி வேலு மணிமாறன் குறித்த இடத்துக்கு சென்று சடலத்தை பார்வையிட்டதுடன் சடலத்தினை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தும் படி பொலிஸாருக்கு கட்டளையிட்டுள்ளார்.

அதனையடுத்து குறித்த இளைஞனின் சடலமானது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வெல்லாவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.