இரு பெளத்த தேரர்கள் உட்பட 7 கொள்ளையர்கள் அதிரடி கைது! வெளியான அதிர்ச்சி தகவல்……!

அக்கரைப்பற்றில் உள்ள நீதவான் ஒருவரின் வீடொன்றை பல வீடுகளை உடைத்து கொள்ளையிட்ட கொள்ளை கும்பலை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இக்கைது சம்பவம் இன்றைய தினம் புதன்கிழமை (09-02-2022) இடம்பெற்றுள்ளது.

மேலும் இச் சம்பவத்தில் இரு பௌத்த தேரர்கள் உட்பட 7 பேர் கொண்ட கும்பலை விசேட பொலிஸ் குழுவினர் கைது செய்துள்ளதுடன் நீதவான் வீட்டில் கொள்ளையிட்ட தாலிக்கொடி உட்பட 55.5 பவுண் தங்க ஆபரணங்களை மீட்டுள்ளதாக பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

அம்பாறை மாவட்டத்தில் ஆலையடிவேம்பு பிரதேசத்தில் கடந்த வருடம் நவம்பர் மாதம் 3 வீடுகளிலும், டிசம்பர் 18ம் திகதி நள்ளிரவு நீதவான் வீட்டிலுமாக ஒருமாதத்தில் 4 வீடுகளின் யன்னல்களை கழற்றி உள் நுழைந்த கொள்ளையடித்துள்ளனர்.

நித்திரையில் இருந்த குடும்ப பெண்களின் கழுத்திலிருந்த சுமார் 30 பவுணுக்கு மேற்பட்ட தங்க நகைகளைத் திருடிச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியது.தொடர் கொள்ளையில் ஈடுபட்டு வந்த கொள்ளையர்கள் நீதவானைக் கூரிய ஆயுதத்தால் குத்தி தாக்கிவிட்டு வீட்டில் கொள்ளையிட்டு சென்றனர். இந்த கொள்ளையர்கள் எந்தவிதமான தடையங்களை விட்டுச் செல்லாமல் பொலிஸாரை திணறடிக்கச் செய்தனர்.

இதனையடுத்து இந்த கொள்ளையர்களைப் பிடிப்பதற்காகக் கிழக்கு மாணான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் எல்.கே. டபிள்யூ கமல் சில்வாவின் ஆலோசனையில் மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் முதலில் 3 பொலிஸ் அதிகாரிகள் தலைமையில் 3 பொலிஸ் குழுக்களை அமைத்துத் தொடர் விசாரணையில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில் அந்த பொலிஸ் குழுவிற்குத் தலைமை தாங்கிய மூன்று சப் இன்பெக்ஸடர்களையும் ஒன்றிணைத்து சப் இன்பெக்கடர்களான அசீம், பி.பிரகலாதன், பைகீரதன் மற்றும் பொலஜஸ் சாஜன்கள் 6 பேர் உட்பட 9 பேர் கொண்ட 4ஆவது விசேட பொலிஸ் குழுவினை அமைத்தனர்.விசேட பொலிஸ் குழுவின் விசாரணையில் கடந்த டிசம்பர் 30 ம் திகதி முதலில் திருக்கோவில் 2ஆம் பிரிவு நல்லையா வீதியைச் சேர்ந்த 35 வயதுடைய சந்துரு என்றழைக்கப்படும் மருமமுத்து அருந்தரகுமாரை கைது செய்து அவனிடம் மேற்கொண்ட விசாரணையில் இந்த கொள்ளைக் கோஷ்டியின் பிரதான சூத்திரதாரியான சத்தியா மற்றும் அக்கிரம் ஆகியோருடன் பௌத்த தேரர்கள் தொடர்புபட்டுள்ளதாகத் தெரிய வந்துள்ளது.

இதனையடுத்து 31ம் திகதி இரவு பௌத்த தேரர்களைத் தேடி தமண பிரதேசத்திலுள்ள தாம்போதி விகாரைக்கு சென்று விசாரணையில் ஈடுபட்டதில் கடந்த 12 ம் திகதி கொழும்பிலிருந்து குறித்த இரு பௌத்த தேரர்களில் ஒருவர் வந்து தங்கியுள்ளதுடன், அடுத்த தேரர் 28 ம் திகதி குறித்த விகாரைக்கு வந்து தங்கியிருந்துள்ளதாகவும் வெளியே காரில் சென்றதாகத் தெரியவந்ததையடுத்து அங்கு கண்காணிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

இந்த நிலையில் போதைப் பொருள் பாவனைக்கு அடிமையான அனுராதபுரம் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்றுவரும் பௌத்த தேரர் ஒருவரும் கொழும்பு விகாரை ஒன்றைச் சேர்ந்த தேரர் ஒருவர் உட்பட இருதேரர்களும் போதைப்பொருள் வியாபாரியான சத்தியாவுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து இரு தேரர்களுக்குப் போதைப்பொருள் தேவை ஏற்படும் போது சத்தியா வழங்கி வந்துள்ளதுடன், சத்தியாவின் பாவனைக்குப் போதை போருள் தேவை ஏற்படும் போது இரு தேரர்களும் சத்தியாவுக்கு போதைப் பொருளை வழங்கி வந்துள்ளனர். அத்துடன் அவனுடன் சேர்ந்து இரு தேரர்களும் புதையல் தோன்றுதல் மற்றும் கொள்ளை நடவடிக்கையில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

இதன் போது குறித்த விகாரையில் கண்காணிப்பில் ஈடுபட்ட விசேட பொலிஸ் குழுவினர் முதலாம் திகதி இரவு தேரர்கள் இருவரும் காரில் வெளியேறிச் செல்வதை அவதானித்ததையடுத்து காரை பின் தொடர்ந்து சென்றுள்ளனர்.இந்நிலையில் சம்மாந்துறை நகரப்பகுதியில் வைத்து பின் தொடர்ந்து வந்த பொலிஸாரின் கண்களில் மண்ணை தூவிவிட்டு அங்கிருந்து தேரர்களின் கார் அல்லிமுல்லை வீதியால் நிந்தவூர் பிரதான வீதிக்குச் சென்று அங்கிருந்து காரைதீவு வெட்டுவாய்க்கால் பகுதிக்குச் சென்று சத்தியாவுக்காக காத்திருந்தனர்.

அப்போது சத்தியாவும் அக்கிரமும் பல்சர் மோட்டார் சைக்கிளில் தேரர்கள் காத்திருக்கும் வெட்டுவாய்க்கால் பகுதிக்குச் சென்றுள்ள நிலையில் காரை பின் தொடர்ந்த விசேட பொலிஸ் குழுவினருக்குக் கொள்ளையர்கள் தேரர்களுடன் பேசிக் கொண்டிருப்பதைக் கண்டதும் ஆச்சரியம் ஏற்பட்டது.இந்நிலையில் கொள்ளைக்காரனான அக்கிரத்தை முதலில் பொலிஸார் மடக்கிப் பிடிக்க முற்பட்டபோது பொலிஸார் மீது சத்தியா துப்பாகி பிரயோகம் மேற்கொண்டுள்ளார். அது குறிதவறி அக்கிரம் மீது குண்டு பாய்ந்ததில் அக்கிரம் படுகாயமடைந்ததையடுத்து, அங்கிருந்து துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட சத்தியாவும் தேரர்களின் கார் சாரதியும் தப்பி ஓடியுள்ளனர்.

இதன்போது இரு பௌத்த தேரர்களையும் கைது செய்ததுடன், அவர்களின் காரில் இருந்து துவிச்சக்கரவண்டி, சொக்கட் பொல் மற்றும் போதைப் பொருட்களை மீட்டனர். துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த கொள்ளையனான அக்கிரத்தை அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதித்ததுடன், அவனின் உடைமையிலிருந்து 5 கிராம் ஜஸ் போதைப் பொருளை மீட்டனர்.

இந்த கொள்ளைகளின் பிரதான சூத்திரதாரியான இந்த சத்தியா யார்?

மட்டக்களப்பு களுதாவளை முருகன் கோவில் வீதியைச் சேர்ந்த குணா அல்லது கராட்டி சத்தியா என்றழைக்கப்படும் முருகமூர்த்தி குணசீலன் 44 வயதுடைய ஒரு பட்டதாரி.

கராட்டி பயிற்சி பெற்ற இவன் முன்னால் விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்து புணர்வாழ்வு பெற்று வெளியே வந்தவர். பாதாள கோஷ்டியைச் சேர்ந்த தெமட்டகொட சமந்தவின் கையாளாகச் செயற்பட்டு வந்ததுடன், திருக்கோவில் மற்றும் கொழும்பு வத்தளையில் திருமணம் முடித்துள்ளார்.

இவர் போதைப்பொருள் வியாபாரம் மற்றும் பல குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார். கடந்த வருடம் களுத்துறை சிறைச்சாலை வாகனத்தின் மீது துப்பாகி பிரயோகம் மேற்கொண்ட சம்பவத்துடன் தொடர்புடைய இவன் 2017 அவுஸ்திரேலியாவுக்கு ஆட்கடத்தல் தொடர்பாக 28 லச்சம் ரூபாவுடன் மட்டக்களப்பில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட பின்னர் பிணையில் வெளிவந்துள்ளார்.

அதேவேளை பல குற்றச் செயல்கள் தொடர்பாக இலங்கையில் பல பொலிஸ் நிலையங்களின் பொலிஸாரால் தேடப்பட்டுவருகின்ற இவன் காலையில் இலங்கையில் நிற்பான், இரவில் கடல்வழியாகப் படகில் இந்தியாவில் நிற்பான். இவனுக்கு மட்டக்களப்பில் சுமார் 65 க்கு மேற்பட்ட குற்றச் செயல்கள் தொடர்பான முறைப்பாடுகளும் வழக்குகளும் உள்ளது.

இந்த நிலையில் 2014ம் ஆண்டு குற்றச்செயல் காரணமாக சத்தியா கைது செய்யப்பட்டு மட்டக்களப்பு சிறையில் இருக்கும் போது, அம்பாறை வாங்கமத்தில் வைத்து கைது செய்யப்பட்ட அக்கிரம் என்பவனின் தந்தையான தச்சுத்தொழிலாளியான அக்கரைப்பற்று 6 ம் குறிச்சியைச் சேர்ந்த தம்பி ஓடாவி என்றழைக்கப்படும் ஆதம்லெப்பை அப்துல் ரகீம் சிறையில் அடைக்கப்பட்டபோது சிறையில் தம்பி ஓடாவிக்கும் சத்தியாவுக்கும் இடையே நட்பு ஏற்பட்டது.

இருவரும் சிறையிலிருந்து பிணையில் வெளிவந்த நிலையில் இருவரும் சேர்ந்து பல கொள்ளைச் சம்பவங்களிலும் போதைப் பொருள் வியாபாரத்திலும் ஈடுபட்டு வந்துள்ளனர்.சத்தியாவின் கொள்ளை நடவடிக்கைக்காகத் தம்பி ஓடாவி கொழும்பில் ஆர்பிகோ நிறுவனத்தில் வேலை செய்துவந்துள்ள தனது மகனான அக்கரத்தை வரவழைத்து சத்தியாவுக்கு உதவிபுரியுமாறு மகனிடம் தெரிவித்து சத்தியாவை அறிமுகப்படுத்தியுள்ளார்.

இந்த நிலையில் வீட்டின் மூடிய யன்னல்களை கழற்றி பின்னர் கிறில்களை கழற்றுவதில் திறமை வாய்ந்த அக்கிரத்தை சத்தியா இணைத்துக் கொண்டு கொள்ளையிடும் வீட்டின் யன்னல் மற்றும் கிறில்களை கழற்றுவதே அக்கிரத்தின் பணி. ஒரு யன்னல் கிறீலை கழற்றுவதற்கு 60 ஆயிரம் ரூபா பணத்தை சத்தியா வழங்கி வந்துள்ளதுடன் கொள்ளையடிக்கப்படும் வீடுகளை அந்தந்த பகுதியில் உள்ள வேவுபார்ப்பதற்கான கொள்ளையர்கள் மூலம் வீட்டின் முழு தகவல்களைத் தெரிந்து கொண்டு சத்தியா கொள்ளையிட்டு வந்துள்ளான்.

தச்சுத்தொழிலாளியான தம்பி ஓடாவியார் அக்கரைப்பற்று நீதவான் வீடு உட்பட ஆலையடி வேம்பில் பொதுச்சுகாதார உத்தியோகத்தர் ஒருவரின் வீடு, கோளாவில் பகுதியில் ஒரு வீடு இவ்வாறு வீடுகளில் கதவு யன்னல் பொருத்தியமை, வீட்டின் உட்பகுதி தொடர்பாகத் தெரிந்த அவர் சத்தியாவுக்கு வேவுபார்த்துக் கொடுத்து வந்துள்ளார்.

அங்கு யன்னல் கிறில்களை கழற்றி அங்கு நித்திரையிலிருந்த பெண்களின் தாலிக் கொடிகளை வெட்டி கொள்ளையடித்து வந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.இதனைத் தொடர்ந்து காரைதீவு வெட்டுவாய்கள் பகுதியிலிருந்து தப்பி ஓடிய தேரர்களின் கார் சாரதியை 2ம் திகதி இரவு கைது செய்ததுடன், கைது செய்யப்பட்ட இரு தேரர்கள் மற்றும் படுகாயமடைந்த கொள்ளையன் அக்கிரம் ஆகியோரை நேற்று வரை பொலிஸ் தடுப்பு காவலில் வைத்து விசாரணை செய்யப்பட்டனர்.

இந்நிலையில் கொள்ளையடிக்கப்பட்ட தங்க ஆபரணங்களை வாங்கி விற்றுவந்தவரும் சத்தியாவுடன் நெருங்கிய தொடர்புடைய செங்கலடி நகைக்கடை ஒன்றில் தொழில் புரிந்து வரும் செங்கலடி றமேஸ்புரத்தைச் சேர்ந்த கண்ணன் என்றழைக்கப்படும் யோகராஜா பரமலிங்கம் என்பவரைக் கைது செய்து பொலிஸ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளது.

மேலும் கொள்ளையடிக்கப்பட்டு மட்டக்களப்பில் விற்கப்பட்ட 45 பவுண் தங்க ஆபரணங்களை மீட்டுள்ளதுடன், நீதவான் வீட்டில் கொள்ளையடித்த 11.5 பவுண் தாலிக் கொடியைக் கொழும்பு செட்டியார் தெருவில் இரு கடைகளில் விற்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளதையடுத்து இதுவரை 56.5 பவுண் தங்க ஆபரணங்களை மீட்டுள்ளனர்.

அதேவேளை இந்த கொள்ளைக்குழுவுடன் தொடர்புடைய விநாயகபுரத்தை சேர்ந்த முன்னாள் போராளியான ராஜன் என்றழைக்கப்படும் இருதயராஜன் என்பவரை 6ம் திகதி கைது செய்துள்ளனர்.

இதுவரை இரு தேரர்கள் உட்பட 7 பேரைக் கைது செய்துள்ளதுடன், செங்கலடி றமேஸ்புரத்தைச் சேர்ந்த கண்ணன் என்றழைக்கப்படும் யோகராஜா பரமலிங்கம், விநாயகபுரத்தை சேர்ந்த முன்னாள் போராளியான ராஜன் என்றழைக்கப்படும் இருதயராஜன் ஆகிய இருவரையும் அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் பொலிஸ் காவலில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.ஏனைய 5 பேரையும் அக்கரைப்பற்று நீதிமன்றில் முன்னிறுத்தப்பட்டு அவர்களை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். தலைமறைவாகியுள்ள பிரதான சூத்திரதாரியான சத்தியா, மற்றும் தம்பி ஓடாவியார் ஆகிய இருவரையும் பொலிஸார் வலைவீசி தேடிவருகின்றனர்.