நரேந்திர மோடி பிறப்பித்த அழுத்தத்தை நிராகரித்த ஜனாதிபதி கோட்டாபய

இந்தியாவின் அழுத்தம் மற்றும் அதானி நிறுவனம் தொடர்பில் இலங்கை மின்சார சபையின் தலைவர் கோப் குழு முன்னிலையில் தெரிவித்த கருத்தினை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நிராகரித்துள்ளார்.

தனது டுவிட்டர் தளத்தில் பதிவொன்றை இட்டு அவர் இது குறித்து தனது மறுப்பினை பதிவு செய்துள்ளார்.

எரிசக்தி முதலீட்டுத் திட்டங்களை அதானி குழுமத்திற்கு வழங்குமாறு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியதாக, ஜனாதிபதி தம்மிடம் தெரிவித்தார் என்று இலங்கை மின்சார சபைத் தலைவர் இலங்கையின் நாடாளுமன்ற கோப் குழுவிடம் தெரிவித்தார் என்று செய்திகள் வெளியாகியிருந்தன.

நேற்று வெள்ளிக்கிழமை (10) நாடாளுமன்றத்தில் பொது நிறுவனங்கள் மீதான விசாரணை (கோப்)குழுவில் முன்னிலையான, மின்சாரசபையின் தலைவர், 500 மெகாவாட் காற்றாலை மின் நிலையத்தை இந்தியாவின் அதானி குழுமத்திற்கு வழங்குமாறு இந்தியப் பிரதமர் தம்மை வலியுறுத்துவதாக ஜனாதிபதி குறிப்பிட்டதாக மின்சார சபைத் தலைவர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.