கடவுச்சீட்டை பெற இனி கொழும்பு வர வேண்டாம் : வெளியான அறிவிப்பு!

திர்வரும் திங்கள் கிழமை முதல் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் வவுனியா, கண்டி மற்றும் மாத்தறை பிரதேச அலுவலகங்களில் ஒரே நாளில் கடவுச்சீட்டை பெற்றுக்கொள்ளும் வசதி ஏற்படுத்திக்கொடுக்கப்பட்டுள்ளதாக முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் தம்மிக்க பெரேரா தெரிவித்துள்ளார்.

இதுவரை ஒரே நாளில் கடவுச்சீட்டை பெற்றுக்கொள்ளும் சேவை பத்தரமுல்லையில் உள்ள திணைக்களத்தின் பிரதான அலுவலகத்தின் ஊடாக முன்னெடுக்கப்பட்டது.

இதனால் கூட்ட நெரிச்சல் ஏற்பட்டதாகவும் அமைச்சர் கூறியுள்ளார். கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் தம்மிக்க பெரேரா இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

அவசரமாக வெளிநாடுக்கு வேலைக்கு செல்ல வேண்டிய தேவை இருப்பவர்கள் அதற்கான ஆவணங்கள் இருந்தால், உடனடியாக புதிய கடவுச்சீட்டை பெற்றுக்கொள்வதற்கான தனியான கருமப்பீடத்தை பத்தரமுல்லையில் ஏற்படுத்தியுள்ளோம்.

நீண்ட வரிசைகள் காணப்பட்டாலும் அவர்கள் இலகுவாக கடவுச்சீட்டை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் தம்மிக்க பெரேரா மேலும் தெரிவித்துள்ளார்.

வவுனியா, கண்டி மற்றும் மாத்தறை அலுவலகங்களில் ஒரு நாள் கடவுச்சீட்டு வழங்கும் சேவை திங்கள் கிழமை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதால், எவரும் அந்த பிரதேசங்களில் இருந்து கொழும்புக்கு வர வேண்டாம் எனவும் தம்மிக்க பெரேரா கேட்டுக்கொண்டுள்ளார்.