இரத்தினபுரியில் அதிபரினால் மாணவர்கள் துஷ்பிரயோகம்?!

இரத்தினபுரி மாவட்டத்தில் உள்ள பிரதான பாடசாலை ஒன்றின் அதிபர், மாணவி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இவர் நீண்டகாலமாக மாணவர்களை துஷ்பிரயோகம் செய்து வருவதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் உதய குமார அமரசிங்க தெரிவித்துள்ளார்.

இரத்தினபுரியில் உள்ள பிரதான ஆண்கள் பாடசாலை ஒன்றில் மாணவி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக அதிகார சபையின் அவசர இலக்கத்திற்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசேட விசாரணைகளை மேற்கொண்ட சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை அதிகாரிகள் அவருக்கு எதிராக நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இந்த அதிபர் பாடசாலை மாணவர்களை விடுதிக்கு வரவழைத்து பணம், பரிசுகள் மற்றும் பல்வேறு சலுகைகளை வழங்கி பாலியல் துஷ்பிரயோகம் செய்து வருவது விசாரணையில் தெரியவந்துள்ளதாக அதிகார சபையின் தலைவர் தெரிவித்தார்.

சிறைச்சாலையில் அடைக்கப்பட்ட பின்னர் ஏனைய மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் அதிபருக்கு எதிராக தகவல் வழங்கியதாகவும் அது உண்மையா என்பது தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பாடசாலையின் சில ஆசிரியர்கள் மற்றும் பழைய மாணவர்கள் சாட்சிகளுக்கு அழுத்தம் கொடுத்து அவ்வாறான தகவல்களை வழங்கவிடாமல் தடுப்பதாகவும் அவர் கூறினார்.

இதுபோன்ற துஷ்பிரயோகங்களுக்கு ஆளாகும் குழந்தைகள் இன்னும் ஏராளம். சிலர் அவமானம் அல்லது பயம் காரணமாக அதைப் பற்றி புகார் செய்ய மாட்டார்கள். இவ்வாறான சம்பவங்களுக்கு முகங்கொடுக்கும் சிறுவர்கள் சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் அவசர தொலைபேசி இலக்கமான 1929 அல்லது 071 8387130 என்ற இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளுமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும் இது தொடர்பாக தகவல் அளிக்கும் குழந்தைகள், பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் தனியுரிமை மற்றும் ரகசியத்தன்மை பாதுகாக்கப்படும் என்றும், தகவல்களை மறைக்க அழுத்தம் கொடுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.