புத்தளத்தில் மாயமான மீனவர் மன்னாரில் சடலமாக மீட்பு!

புத்தளம் –கற்பிட்டி பத்தலங்குண்டு கடற்பகுதியில் மீன்பிடிக்கச் சென்று காணாமல் போன மீனவர் ஒருவர் சடலமாக நேற்று (07-10-2022) மீட்கப்பட்டுள்ளார்.

புதுக்குடியிருப்பு கற்பிட்டியைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான முஹம்மட் பஸ்லானின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த புதன்கிழமை (05-10-2022) கற்பிட்டி பத்தலங்குண்டு கடற்பகுதியில் சங்கு குளிப்பதற்காக கடலில் குதித்து கடலுக்குள் சென்ற மீனவர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

காணாமல் போன மீனவரை மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் கடற்படை மற்றும் பொலிஸாரின் உதவியுடன் கடந்த இரண்டு நாட்களாக தேடி வருகின்றனர்.

எனினும் குறித்த மீனவரின் சடலம் இன்று மன்னார் சிலாவத்துறை கரையோரப் பகுதியில் கரை ஒதுங்கியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

கரை ஒதுங்கிய மீனவரின் சடலம் விசாரணைகளின் பின்னர் புத்தளம் கொண்டுவரப்பட்டதுடன் சடலம் தற்போது பிரேத பரிசோதனைக்காக புத்தளம் தல வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.