மட்டக்களப்பில் மனைவியை அடித்து கொலை செய்துவிட்டு தப்பியோடிய கணவர்!

மட்டக்களப்பு, காத்தான்குடி, ஆரையம்பதியில் 60 வயதுடைய நபர் ஒருவர் தனது மனைவியை அடித்துக் கொலைசெய்துள்ளதாக சிங்களப் பொலிஸார் தெரிவித்தனர்.

ஆரையம்பதி மாவிலாந்துறையைச் சேர்ந்த நவரெத்தினம் சோதிமலர் என்ற 60 வயதுடைய 7 பிள்ளைகளின் தாயே உயிரிழந்துள்ளார்.

கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்த நிலையில் கணவன் மனைவியை விட்டு பிரிந்து கல்லாறு பகுதியில் கடந்த ஒரு மாதமாக தங்கி இருந்துள்ளார். சம்பவத்தன்று நேற்று மனைவி அவரைத் தேடிச் சென்று சமாதானம் பேசி அழைத்து வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்றிரவு மனைவியை அடித்துக் கொன்றுவிட்டு கணவர் தப்பியோடியுள்ளதாக பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் சிங்கள பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.