QR முறைமை குறித்து வெளியான அறிவிப்பு!

தேசிய எரிபொருள் அனுமதி QR முறையை அடுத்த மாதம் முதல் இரத்து செய்வது தொடர்பில் எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

எரிபொருள் தேவைகள் முழுமையாக பூர்த்தி செய்யப்படும் வரை QR அமைப்பு தொடரும் என்றும் சில ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் பரிந்துரைக்கப்பட்டுள்ளபடி அடுத்த மாதம் அகற்றப்படாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, எதிர்காலத்தில் எரிபொருள் ஒதுக்கீடு இன்றி சாதாரணமாக எரிபொருள் விநியோகிக்கப்படும் எனவும், நாளாந்த அடிப்படையில் எரிபொருள் விலையை திருத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

பெற்றோலிய விநியோகஸ்தர்களின் 50வது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.