மது போதையில் பாடசாலை அதிபரை தடியினால் தாக்கிய மாணவன் கைது : வவுனியாவில் சம்பவம்

மது போதையில் பாடசாலை அதிபரை தடியினால் தாக்கிய மாணவன் கைது : வவுனியாவில் சம்பவம்

வவுனியா நகருக்கு அருகில் உள்ள பாடசாலை ஒன்றில் உயர்தர மாணவர் ஒருவர் அதிபரை தாக்கியதில் அதிபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் பாடசாலை மாணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இம்முறை உயர்தரப் பரீட்சையில் சித்தியடையாத மாணவர்களின் ஒன்றுகூடல் பாடசாலையில் நடைபெற்றுள்ளது

பாடசாலை மாணவர்களுக்கான நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன், குறித்த நிகழ்விற்கு மாணவர்களை எவ்வாறு சமூகமயப்படுத்துவது மற்றும் மாணவர்களின் ஒழுக்கம் தொடர்பில் அதிபர் மற்றும் ஆசிரியர்களினால் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.

இந் நிலையில் பாடசாலை மாணவர்களின் ஒழுக்க நடைமுறைக்கு மாறாகவும், காதில் தோடு அணிந்தவாறும் மாணவன் ஒருவர் குறித்த நிகழ்விற்கு சமூகமளித்துள்ளார்.

மாணவனை அவதானித்த அதிபர், அவர் அணிந்திருந்த தோட்டினை கழற்றிவிட்டு மாணவர்களின் ஒழுக்கத்துடன் வருமாறு கூறி அனுப்பியுள்ளார்.

இதன் பின்னர் அங்கிருந்து சென்ற மாணவன் மது அருந்திவிட்டு பாடசாலைக்கு வருகை தந்து நிகழ்வு மண்டபத்தில் அதிபர், அதிதிகள் மற்றும் ஆசிரியர்கள் அமர்ந்திருந்த போது அதிபரை தடியால் தாக்கியுள்ளார்.

இதன் போது அதிதியாக கலந்து கொண்ட பிரதிநிதி ஒருவருக்கும் லேசான காயம் ஏற்பட்டது.

சம்பவத்தில் காயமடைந்த அதிபர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், சம்பவத்தை அடுத்து அங்கு சென்ற பாடசாலையின் முன்னாள் மாணவனை கைது செய்து வவுனியா பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதுடன் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட மாணவன் வவுனியா மகாறம்பைக்குளம் பகுதியைச் சேர்ந்த மாணவன்.