வாகன இறக்குமதி மட்டுப்படுத்தப்பட்டுள்ளதால் குறைவடைந்துள்ள சுங்க வருமானம்

கடந்த மூன்று வருட காலமாக வாகன இறக்குமதி மட்டுப்படுத்தப்பட்டுள்ளதால் சுங்க வருமானம் குறைந்துள்ளதாக சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எதிர்பார்த்த வருமானம்

அத்துடன் வாகன இறக்குமதி உட்பட பல வகையான பொருட்களுக்கு இறக்குமதி கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் வரவு செலவு திட்டத்தில் எதிர்பார்த்த வருமானத்தை எட்ட முடியவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

தேசிய பொருளாதாரம் மற்றும் பௌதீக திட்டமிடல் தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவர் மஹிந்தானந்த அளுத்கமகே தலைமையில் குறித்த குழு அண்மையில் கூடியுள்ளது.

இதன்போது அரச வருமானத்தை அதிகரிப்பதில் இலங்கை சுங்கத்துறைக்கு வழங்கக்கூடிய பங்களிப்பு குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது. இந்த சந்தர்ப்பத்தில் கருத்து தெரிவிக்கும் போதே சுங்க அதிகாரிகள் இந்த விடயத்தை கூறியுள்ளனர்.

வாகன இறக்குமதியால் கிடைக்கும் வருமானம்

மேலும் தெரிவிக்கையில், இறக்குமதி கட்டுப்பாடுகள் இருக்கும் வரை எதிர்பார்த்த வருமானத்தை எட்ட முடியாது. வாகன இறக்குமதிக்கு விதிக்கப்படும் வரிகளினால் சுங்கத்திற்கு 20 வீத வருமானம் கிடைக்கும்.

எனினும் கட்டுப்பாடுகள் நடைமுறையில் இருக்கும் வரை எதிர்பார்த்த வருமானத்தை எட்ட முடியாது. 2014ஆம் ஆண்டு தொடக்கம் 2022ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் அதிகூடிய வரி வருமானம் 2018ஆம் ஆண்டு பெறப்பட்டுள்ளது.

அதன் வரித்தொகை 923 பில்லியன் ரூபா. இதன்படி 194 பில்லியன் ரூபா வருமானம் வாகன இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட வரிகள் காரணமாக கிடைத்துள்ளதாக தெரியவந்துள்ளதாக நாடாளுமன்ற தொடர்பாடல் பிரிவு தெரிவித்துள்ளது.

எனினும் கடந்த மூன்று வருட காலமாக வாகன இறக்குமதி மட்டுப்படுத்தப்பட்டுள்ளதால் சுங்க வருமானம் குறைந்துள்ளது.

இம்மாதம் முதல் வாகன இறக்குமதிக்கு அனுமதி வழங்கினால் எதிர்வரும் 06 மாதங்களுக்குள் 150 பில்லியன் ரூபா வரியாக வசூலிக்க முடியும் என சுட்டிக்காட்டியுள்ளனர்.