பல துப்பாக்கிச்சூட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய நபர் உயிரிழப்பு!

எம்பிலிபிட்டிய, பனாமுர, வெலிக்கடையாய பிரதேசத்தில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் 22 வயதுடைய சந்தேக நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் உயிரிழந்தநபர் பல துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடையவர் என்ற அடிப்படையில் அவரைக் கைது செய்வதற்காக இன்று சனிக்கிழமை (24) அதிகாலை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது, குறித்த நபர் பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் மீது துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டுள்ளார். 

இதையடுத்து, பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் சந்தேக நபர் மீது துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்ட நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் முன்னாள் இராணுவவீரர் என பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர் மினுவாங்கொடை பெஸ்டியன் மாவத்தை பிரதேசத்தில் அண்மையில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகம் மற்றும் அம்பலாங்கொடையில் பிரதி அதிபர் ஒருவா் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகம் ஆகியவற்றுடன் தொடர்புடையர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை எம்பிலிபிட்டிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.