பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டவர் திடீர் மரணம்

முறைப்பாடு ஒன்று தொடர்பில் இங்கிரிய பொலிஸ் நிலையத்துக்கு அழைக்கப்பட்டிருந்த நபர் ஒருவர் திடீரென சுகவீனமடைந்து உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் நேற்றிரவு (17) இங்கிரிய மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.

கூரிய ஆயுதத்தால் தாக்குதல்

42 வயதுடைய வஜிரா என்ற நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் இங்கிரிய பிரதேசத்தில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றின் உரிமையாளருடன் சில ஆவணங்கள் தொடர்பாக வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகின்றது.

இதன்போது அவர் வர்த்தகரை கூரிய ஆயுதத்தால் தாக்க முற்பட்டுள்ளதாகவும் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் வர்த்தகர் இங்கிரிய பொலிஸில் செய்த முறைப்பாட்டின் பிரகாரம், அவர் வரவழைக்கப்பட்டு, எதிர்காலத்தில் இவ்வாறு நடந்து கொள்ள வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளார்.

இதன் பின்னர் அவர் திடீரென நோய்வாய்ப்பட்டு இங்கிரிய மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.