அடுத்த வருடம் ஜனாதிபதி தேர்தல் நடாத்த ஆலோசனை

அடுத்த வருடம் முதல் காலாண்டில் ஜனாதிபதி தேர்தல் குறித்து தேசிய மட்டத்தில் பல்வேறு கருத்துக்கள் உலாவுகின்ற நிலையில், தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் உள்ளிட்ட ஏனைய உறுப்பினர்களை அழைத்து தேர்தல் குறித்து முக்கிய அறிவிப்பை ஜனாதிபதி  ரணில் விக்ரமசிங்க வழங்கியுள்ளார்.

ஜனாதிபதி தேர்தலை நடத்தவதற்கு தேவையான நிதி அறிக்கையை காலதாமதமின்றி சமர்பிக்குமாறு, ஆணைக்குழு உறுப்பினர்களை கேட்டுக்கொண்ட ஜனாதிபதி, சட்டமாதிபர் தினைக்களம் மற்றும் நிதி அமைச்சின் அதிகாரிகளுக்கும் இது குறித்து அறிவிப்புகளை விடுத்துள்ளார்.

இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.எல். ரத்நாயக்க உட்பட ஆணைக்குழுவுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள அதிகாரிகள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். இந்த சந்திப்பில் நிதி அமைச்சின் அதிகாரிகள் மற்றும் சட்டமாதிபர் தினைக்களத்தின் அதிகாரிகளும் கலந்துக்கொண்டிருந்தனர்.

இந்த சந்திப்பின் போதே  ஜனாதிபதி தேர்தல் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கு மேலும் குறிப்பிடுகையில்,

அடுத்த ஆண்டில் ஜனாதிபதி தேர்தலை நடத்துவதாயின்  எவ்வளவு நிதி தேவைப்படும்.  ஏனெனில் அதற்கான நிதியை ஒதுக்க வேண்டிய தேவை உள்ளது. அடுத்த ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் குறித்த நிதியை ஒதுக்கிக் கொள்ள வேண்டும். எனவே ஜனாதிபதி தேர்தலுக்கான நிதி விவரத்தை தருமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் அதிகாரிகளிடம் ஜனாதிபதி தெரிவித்தார். 

இதற்கு மறுமொழியளித்த தேர்தல்கள் ஆணைக்கழுவின் தலைவர் ஆர்.எம்.எல். ரத்நாயக்க கூறுகையில், கூடிய விரைவில் ஜனாதிபதி தேர்தலுக்கான மதிப்பீடுகளை செய்து தேவைப்படுகின்ற நிதி  குறித்த முழுமையான அறிக்கையை தருவதாக கூறினார்.

அதனை உடனடியாக நிதி அமைச்சுக்கு அனுப்புமாறு ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவுக்கு ஜனாதிபதி ஆலோசனை வழங்கினார்.  மேலும் தேர்தலுக்கான நிதி ஒதுக்கீடு குறித்து மேலதிக பேச்சு வார்த்தைகளை சம்மந்தப்பட்ட அரச கட்டமைப்புகளுடன் கலந்துரையாடுமாறும் குறிப்பிட்டார். அத்துடன் தேர்தலுக்கான கால எல்லையை குறைப்பதற்கான வழிமுறைகள் குறித்து ஆராயுமாறும் ஜனாதிபதி இதன் போது ஆலோசனை வழங்கினார்.