மன்னாரில் கரையொதுங்கிய சடலம் தொடர்பில் பொது மக்களிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை!

மன்னாரில் கரை ஒதுங்கிய நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மன்னார் பிரதான பாலத்தடியில் உள்ள இராணுவ சோதனைச் சாவடிக்கு சற்று தொலைவில் உள்ள கடற்கரை பகுதியில் இச் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2 ஆம் திகதி மாலை இச் சடலம் அடையாளம் காணப்பட்டதோடு மன்னார் பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

அடையாளம்

உயிரிழந்தவர் சுமார் 30 தொடக்கம் 50 வயது மதிக்கத்தக்க 4.8 அடி உயரம் கொண்ட ஆண் எனவும், கருப்பு நிற நீள கை சேட், கருப்பு நிற அரைக்காற்சட்டை மட்டும் நீல நிற பெட்டி சாரம் அணிந்திருந்ததாக மன்னார் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அவர் அணிந்துள்ள கருப்பு நிற அரைக் காற்சட்டையில் (SRI LANKA CRICKET ) என எழுதப்பட்டுள்ளது.

அவருடைய கருப்பு நிற நீள கை சேட் பொக்கட்டில் 120 ரூபாய் பணம் காணப்பட்டுள்ளதோட அப் பொக்கட் குண்டுப்பின்னினால் குத்தப்பட்டுள்ளது.

எனவே இச் சடலம் தொடர்பான தகவல் தெரிந்தவர்கள் அல்லது அடையாளம் காண விரும்புபவர்கள் மன்னார் பொலிஸ் நிலையம் அல்லது மன்னார் மாவட்ட பொது வைத்திய சாலையுடன் தொடர்பை ஏற்படுத்துமாறு மன்னார் பொலிஸார் பொது மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.