மலை உச்சியில் பெண்ணின் சடலம் மீட்பு!

தலவாக்கலையில் மலைப் பகுதியொன்றில் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதை தொடர்ந்து நுவரெலியா மாவட்டத்தில் உள்ள வனவிலங்கு மற்றும் வன சரணாலயங்கள் அமைந்துள்ள பகுதிகளுக்குள் செல்வதும், மலைகளில் ஏறுவதும், மலைகள் அமைந்துள்ள பகுதிகளில் தங்கியிருப்பதும் தடை செய்யப்பட்டுள்ளதாக நுவரெலிய மாவட்ட செயலாளர் நந்தன கலப்பட தெரிவித்துள்ளார்.

தலவாக்கலையில் மலை உச்சியொன்றில் சந்தேகத்திற்கு இடமான முறையில் உயிரிழந்த பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதை தொடர்ந்தே இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் நுவரெலியா மாவட்ட செயலகத்தில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இதனை தொடர்ந்து நுவரெலியாவில் எவராவது  மலைப்பகுதிக்கு  செல்ல அல்லது மலையில்  ஏற விரும்பினால் அவர்கள் உரிய அரசஅதிகாரிகளின் அனுமதியை பெறவேண்டும் என்ற உத்தரவு வெளியாகியுள்ளது.

மேலும், அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திடம் இதற்கான அனுமதியை பெறவேண்டியதும் அவசியம்.

மலைப்பகுதிக்கான தங்கள் சுற்றுலா முடிவடைந்ததும் தாங்கள் பாதுகாப்பாக வந்துசேர்ந்துவிட்டதை அவர்கள் பொலிஸாரிற்கு அறிவிக்கவேண்டும்.

அனுமதியின்றி மேற்குறிப்பிட்ட பகுதிகளுக்கு செல்பவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.