துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த சிறுமியின் சடலம் பெற்றோரிடம் ஒப்படைப்பு!

  கடந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் (17) மருதானை சரத் பொன்சேகா மாவத்தையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் துரதிஷ்டவசமாக உயிரிழந்த 6 வயது சிறுமியின் சடலம் கொட்டாஞ்சேனை இல்லத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

சரத் பொன்சேகா மாவத்தையில் கொலைக்குற்றச்சாட்டுக்கு உள்ளான 36 வயதுடைய சந்தேக நபர் ஒருவரை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.

துரதிஷ்டவசமாக உயிரிழந்த சிறுமி

ஆனால் துப்பாக்கிச் சூட்டில் சந்தேக நபர் காயமடைந்துள்ளதுடன், எதிர்பாராதவிதமாக அவரது 6 வயது மகளும் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானார்.

சிறுமி உடனடியாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் துரதிஷ்டவசமாக உயிரிழந்துள்ளார். சம்பவத்திஒல் அபிமானி தெருவந்திகா என்ற 6 வயது சிறுமியே உயிரிழந்துள்ளார்.

பிரேத பரிசோதனைக்கு பின், சிறுமியின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் நேற்று (18) நள்ளிரவு கொட்டாஞ்சேனையில் உள்ள வீட்டில் சடலம் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

அதேவேளை இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் எவரையும் பொலிஸாரால் இதுவரை கைது செய்ய முடியவில்லை.