பொது மகனை தாக்கிய பொலிசார் கைது!

   கடையொன்றில் பியர் அருந்திக்கொண்டிருந்த இருவரை தாக்கிய சம்பவம் தொடர்பில் தலாத்துஓயா பொலிஸில் கடமையாற்றும் சார்ஜன்ட் மற்றும் கான்ஸ்டபிள் ஒருவரும் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தலாத்துஓயா குருதெனிய வீதியிலுள்ள கடையொன்றில் இடம்பெற்றுள்ளது.

இரு தரப்பினருக்கும் இடையில் வாக்குவாதம்

சந்தேக நபர்களான இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களாலும் தாக்கப்பட்ட இருவரும் பேராதனை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று திங்கட்கிழமை (18) இருவர் பியர் அருந்திக் கொண்டிருந்த போது தலாத்துஓயா பொலிஸின் ஊழல் ஒழிப்புப் பிரிவினர் அந்த இடத்துக்குச் சென்று அங்கு பியர் குடிக்கக் கூடாது என இருவரையும் எச்சரித்துள்ளனர்.

இதன்போது, இரு தரப்பினருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டதையடுத்து, கான்ஸ்டபிள் மற்றும் சார்ஜன்டும் தடி மற்றும் மண்வெட்டியால் இருவரையும் தாக்கியதாக கூறப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு முறைப்பாடுகள் கிடைத்ததையடுத்தே இரு பொலிஸாரும் கைது செய்யப்பட்டனர்.