இன்று முதல் மின் கட்டண அதிகரிப்பிற்கு அனுமதி!

இன்று (20) முதல் மின் கட்டணத்தை அதிகரிப்பதற்கு இலங்கை மின்சார சபைக்கு அனுமதி கிடைத்துள்ளது.

இதன்படி, மின்சாரத்தைப் பயன்படுத்தும் அலகுகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப திருத்தப்பட்ட கட்டணங்கள் எவ்வாறு அதிகரிக்கப்படும் என்பது தொடர்பில் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இன்று (20) அறிக்கையொன்றை வெளியிடவுள்ளது.

மின்சாரக் கட்டணங்களின் சதவீத அதிகரிப்பு தொடர்பில் விரைவில் அறிவிக்கப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.

பொது மக்கள் கருத்தறியும் திட்டத்தின் பின்னரான   மீளாய்வின் படி, சுமார் 18 வீதம் அளவில் மின்சார கட்டணத்தை அதிகரிக்க பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளதாகவும், இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிக்கை இன்று வெளியிடப்படும் எனவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உத்தேச மின்சாரக் கட்டண அதிகரிப்பு தொடர்பான மக்கள் கருத்தறியும் நிகழ்ச்சி கடந்த 18ஆம் திகதி கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

எவ்வாறாயினும், கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அகில இலங்கை சிறு கைத்தொழில் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் நிலுக்ஷ குமார, இந்த மக்கள் கருத்தறியும் திட்டத்தில் வெளிப்படைத்தன்மை இல்லை என தெரிவித்தார்.