பண்டிகை காலத்திற்கு தேவையான அரிசி இறக்குமதி செய்ய நடவடிக்கை!

எதிர்வரும் பண்டிகைக் காலத்துக்கு தேவையான அரிசியை விநியோகிப்பதற்காக அரிசி கையிருப்பு ஒன்றை இறக்குமதி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

பாரிய ஆலை உரிமையாளர்கள் அரிசியினை மறைத்து வைத்திருப்பதால் தற்போது சந்தையில் கீரி சம்பா மற்றும் சம்பா அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி பண்டிகைக் காலங்களில் அரிசி தட்டுப்பாட்டைத் தவிர்க்கும் வகையில் அரிசியை இறக்குமதி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வர்த்தக, வணிக மற்றும் உணவுப் பாதுகாப்பு அலுவல்கள் அமைச்சு ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் அமைச்சர் நளீன் பெர்னாண்டோ தெரிவித்தார்.

கீரி சம்பா அரிசிக்கு நிகரான அரிசி வகை இறக்குமதி செய்யப்படவுள்ளது.

இதேவேளை, சந்தையில் அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படும் வகையில் அரிசி ஆலை உரிமையாளர்களின் செயற்பாடுகளை கட்டுப்படுத்தும் வகையில் அரிசியை இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்க வேண்டியுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

இதேவேளை எதிர்வரும் பண்டி காலத்தின் போது சதொச ஊடாக நுகர்வோருக்கு விசேட விலைச் சலுகைகளை வழங்கவுள்ளதாக அதன் தலைவர் பசந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

ஒன்பது வருடங்களின் பின்னர் லங்கா சதொச நிறுவனம் இவ்வருடத்தின் கடந்த 10 மாதங்களில் நிகர இலாபத்தை ஈட்டியுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.