சிறைச்சாலை தாக்குதலில் கைதி உயிரிழப்பு!

மட்டக்களப்பு சிறைச்சாலையில் கைதி ஒருவர் மற்ற கைதிகளால் தாக்கப்பட்டதில் உயிரிழந்தார்.

சம்பவத்தில் உயிரிழந்தவர் கொக்கட்டிச்சோலை பகுதியைச் சேர்ந்த 46 வயதுடைய எஸ். துரைராசா என்ற நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சட்டவிரோத மதுபான வழக்கு தொடர்பில் நீதிமன்றத்தில் ஆஜராகாததால், பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நபரை கொக்கட்டிச்சோலை பொலிஸார் கைது செய்த நிலையில், அவர் எதிர்வரும் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

இதனை அடுத்து சிறையில் அடைக்கப்பட்டிருந்த போது, ​​அங்கிருந்த மற்ற 8 கைதிகளுடன் உயிரிழந்த நபர் தகராறு செய்ததாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

ஏனைய கைதிகளின் தாக்குதலால் காயமடைந்த கைதி, சிறைச்சாலை அதிகாரிகளால் மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே தாக்குதலுக்கு இலக்கான கைதி உயிரிழந்தார்.

உயிரிழந்த கைதியின் பிரேத பரிசோதனை கடந்த 30 ஆம் திகதி மட்டக்களப்பு வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்டதில், ஆயுதம் ஒன்றினால் தாக்கப்பட்டதில் மரணம் ஏற்பட்டமை உறுதி செய்யப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

தாக்குதல் நடத்திய சந்தேகநபர்கள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை எனவும், எதிர்காலத்தில் நீதிமன்ற உத்தரவைப் பெற்று உயிரிழந்த கைதியுடன் அறையில் இருந்த கைதிகளிடம் வாக்குமூலம் பெறப்படும் எனவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.